.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

இது எனது உரிமை!

| | 2 comments

بسم الله الرحمن الرحيم


ஹிஜாப்  என் கண்ணியத்தின் கவசம்..
==========================================

ஹிஜாப் ஏன் அணிகிறீர்கள்?
எத்தனை அழகாக இருக்கிறீர்கள் ஆனால் அத்தனையும் மூடி மறைத்துவிடுகிறீர்களே! இது உங்களுக்கான விலங்காக  தோன்றவில்லையா? [துபையில் மேடை நிகழ்வொன்றின் சந்திப்பில்] எனக்கேட்ட என் அன்பு மாற்றுமத சகோதரிக்கு,
 ”எனதான பதில் அனைவருக்குமானதாய்”
====================================================================

பிறப்பாலும் வளர்ப்பாலும் நான் ஒரு முஸ்லீம்,இஸ்லாத்தின் கடமைகளை அறிந்து அதன்படி நடக்கவும் செயலாற்றவும் கற்றுத்தரப்பட்டவள்,
சுதந்திரம் எது? விலங்கு எது?
என பிரித்தறியும் திறனையும் இறைவனால் வழங்கப்பெற்றவள்
மூடியிருப்பது உடலையே தவிர மூளையை அல்ல! இது என் முயற்சியின் முட்டுக்கட்டையுமல்ல!  எனது அழகும் அலங்காரமும் எனக்கும் என்னவருக்கானது மட்டுமே தவிர,எவருக்குமானதல்ல , என்னழகோ என் உடையோ பிறரைக்கவர்ந்து அவரை நான் பாவத்தின்பக்கம் ஈர்ப்பதற்கு நான் ஈனப்பிறவியுமில்ல.

இது விலங்கல்ல! எனக்கான சுதந்திரம், இச்சுதந்திரத்தால் ”நான் நானாக இருக்கிறேன்” எனது கம்பீரமும் கண்ணியமும் ஐயத்தெளிவும் இதிலுள்ளதென பெருமைப்படுகிறேன், பெண் அழகோ அழகற்றோ எப்படி இருந்தாலும் அவளின் பெண்மை களவாடப்படுகிறது
இதனை நான் அணிந்து செல்கையில் புரையோடிக்கிடக்கும் பிறமன புழுக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதாய் உணர்கிறேன்,அதுபோதாதா?

கற்பழிப்புகள் மட்டுமே மான அவமான கணக்கில் கொள்ளப்படுகிறது அதுமட்டுமில்லை, பெண்ணின் அரைகுறை ஆடைகளின்வழியே அங்கங்களை அணுஅணுவாய் அளக்கும் கண்ணூசிப் பார்வைகளால் துளைக்கப்படுவதை ரசிக்கப்படுகிறதென்ற பெயரில் ஆசைகொள்வதும் அதன்வழியே இச்சைகொள்[ல்]வதும் அதனால் இச்சமூகம் சீரழிவதும் குற்றக்கணக்கில் சேர்க்கப்படுவதில்லை என்பதே வேதனை.

மாணிக்கத்தை தன்வாயின் அலவுகுள் பாதுகாக்கிறதே பாம்பு எதற்கு? அதன் மதிப்பறிந்துதான். உலகம் அழகானது ஆனால் அதில் உலவும் மனிதமனங்கள் அசுத்தம் படிந்தது, சற்று குறுக்கு புத்தியிலானது, குறுக்கில் சறுக்கி அலங்கோலமாக வாழ்வதைவிட, அழகியமுறையில் ஆத்மார்த்தநிலையில் என்னை நேர்ப்படுத்தும் முயற்சியாய் வாழ்வதே சிறப்பாக எண்ணுகிறேன், பாதுகாப்பின் அவசியத்தை உள்ளார்ந்து  எனது கண்ணியமும் பாதுகாப்பும் ஹிஜாப்பில் இருப்பதாய் உணர்ந்து நான் மாணிக்கமாகவே இருக்க விரும்புகிறேன்,

எத்தனைதான் பெண்ணியம்பற்றி பேசினலும் பெண் என்றைக்குமே பெண்தான் அவள் மேன்மைதான், பெண்ணால் எல்லாம்முடியும் ஆனால் அவள் ஆணாக முடியாது, அவன்போல் வெளிநடப்புக்கூடாது என்பதில் எனக்கு எவ்விதமாற்றுக் கருத்துமில்லையென தெரிவிப்பதோடு,
பெண்மைக்குத் தேவையான சுதந்திரமளித்து பாதுக்காக்கும் ஒரு அழகிய வழித்தோன்றலில் நானும் ஒருபெண்ணாய் பிறப்பெடுத்தமைக்காக மிகவும் பெருமைப்படுகிறேன், ஹிஜாப் எங்களுக்கான விலங்கல்ல பெண்களுக்கான சுதந்திரம்- என்றுசொல்லி முடிக்கிறேன்.........

 //மன எண்ணங்களையும் மற்ற விசயங்களையும் எடுத்துரைத்து விளக்கம்தர எழுத்தறிவை தந்துதவிய ஏகயிறைவனுக்கும்,மிக அவசியமான கேள்வியெழுப்பி என் உணர்வுகளை வெளிகொண்டுவர உதவிய உடன்பிறவா சகோதரி மேனகாவுக்கும்.இஸ்லாமிய பெண்மணிதளத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.//


இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

சிந்திக்க தவறுகிறோமோ?

| | 0 comments



بسم الله الرحمن الرحيم 


நன்றி கூகிள்

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]

அன்புடையோர் அனைவரின்மீதும் இறைவனின் சந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!

முன்னோட்டமாய்: ஆறெழு தலைமுறைக்கு முன்னால் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டு இம்மார்க்கத்தை ஏற்றுகொண்டு வந்த நாம் இன்று இஸ்லாத்தின் கடமைகளை சரிவர செய்கிறோமா? அதன் வழியில் நடக்கிறோமா? அப்படியே நடந்தாலும் அதனை தொடர்ந்து செய்கிறோமா? ஈமானின் உறுதி நிலைத்திருக்கிறதா? உணர்சிவசப்படக்கூடியவைகளுக்கு மட்டும் உறுதியாய் இருக்கும் ஈமான், உணர்வு மயமானவைகளுக்காவும் இருக்கிறதா? ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் நம்மிடம் ஈமானும் இஸ்லாமும் கலந்து இருக்கிறதா? எப்போதாவது இதைப்பற்றி சிந்திக்கிறோமா?

இஸ்லாம் தூய்மைப்படுத்தப்பட்ட மார்க்கம்; அதன் தூய்மை எவராலும் எதுவாலும் உலகநாள் அழிகின்றவரையில் அதனை அழிக்கவோ, அல்லது
அதனை கலங்கப்படுத்தவோ கறையேற்படுத்தவோ முடியாது.
இம்மார்க்கத்தை கண்ட கூத்தாடிகளும், காழ்ப்புணர்வு கொண்டவர்களும்
எவ்வழியிலும் கறைபடுத்த நினைத்தாலும், குற்றங்கானத் துடித்தாலும் ஒருபோதும் நடக்காது. ஏனெனில் இது அகிலத்தைப் படைத்து பாதுகாக்கும் எல்லாம் வல்ல ஏகன் ஒருவனின் இனியமார்க்கம். இது இறைவன் வகுத்த ஏற்றமிகு தூயமார்க்கம் .

இம்மார்க்கம் ஐந்து  தூண்களால் நிறுவப்பட்டுள்ளது

முதலாவது: கலிமா

லாயிலாக இல்லல்லாஹு முகம்மதுர் ரசூலில்லாஹி
பொருள்: வணக்கத்திற்குரியவன்  இறைவன் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை
முகம்மதுநபி [ஸல்] அவர்கள் இறைவனின் திருத்தூதராக இருக்கிறார்கள்.

2.தொழுகை

வணக்கத்திற்க்குறிய இறைவனை ஒரு நாளைக்கு ஐந்துவேலை தொழுதுகொள்ளுதல்.

"விசுவாசிகளே! நீங்கள் தொழுகைக்குத் தயாரானால் உங்கள் முகங்களையும்,
முழங்கை உட்பட இரு கைகளையும் கழுவிக்கொள்ளுங்கள்!
உங்கள் தலைகளை நீரினால் தடவி, கரண்டை உட்பட இரு கால்களையும் கழுவிச் சுத்தம் செய்யுங்கள்! (5:6)

3.நோன்பு

வணக்கத்திற்குறிய இறைவனுக்காக வருடத்திற்கொருமுறை
30 அல்லது 29 [பிறைப் பார்த்து] உண்ணா நோன்பு இருத்தல்.

"ஈமான் கொண்டோர்களே!உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு
விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது;
(அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்". (2:183)

4.ஜக்காத்

ஏழை எளிவருக்கு தன்னிடமுள்ள பணம் மற்றும் பொருள்களை வாரி[வரியாக] வழங்குதல்.

"நிச்சயமக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ,
அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு
சுருக்கியும் விடுகிறான்; ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்த போதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்; மேலும், அவன் கொடையாளிகள்
அனைவரிலும் மிகவும் மேலானவன்" என்று (நபியே) நீர் கூறும். (34:39)

5.ஹஜ்
வாழ்நாட்களில் ஒருமுறையாவது இறுதிக் கடமையாம் ஹஜ்ஜை நிறைவேற்றுதல். இது வசதியிருதால் மட்டுமே! வசயிருப்போரும் பிறர் இக்கடமையை முடிக்க உதவலாம்.

இறைவன் மனிதர்களுக்கு வேண்டிய சலுகைகளை கொடுத்து அவன் எவ்வாறு நடந்துக் கொள்கிறான் என்று கவனித்தவனாகவே இருக்கிறான், நம்முடைய அத்துமீறிய போக்கு இறை அங்கீகாரத்தை பாதித்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். (2:198)

ஆக இந்த ஐந்து தூண்களின் எழுப்பட்ட இந்த எளியயமார்க்கம்தான் இஸ்லாமென்னும் இறையளித்த அற்புத மார்க்கம். இதை உலகிலுள்ள அனைவரும் பெரும்பாலானவர்கள் கட்டாயம் அறிந்திருப்பார்கள், அறியாதவர்களுமிருக்கலாம்,

உலகம் உண்டாக்கிய நாள்தொட்டு தொடங்கிய இஸ்லாம், இறைதூதர் முகமத்து நபி [ஸல்]அவர்களால் முழுமைபெற்று பூர்த்தியடைந்து 1434 அன்றுதொட்டு இன்றுவரை, இறுதிவரை இதிலிருந்து ஒரு கொசுவளவுகூட மாறவும் மாறாது, மாற்றமுமிருக்காது. இதுதான் இஸ்லாம், இதுதான் இறைவனின் இன்றியமையா மார்க்கம்.

பிறப்பு  என்பதில் தொடங்கி மரணிக்கும் வரைக்கும்,
அதன் இடைபட்ட வாழ்க்கையிலும் நாம் எப்படியிருக்கவேண்டும், எப்படி நடக்கவேண்டும், என்று குர்ஆன் சொல்லிலும் நபிவழி செயலிலும், இம்மார்க்கத்தை ஏற்றுள்ள இஸ்லாமியர்களாகிய நமக்கும் உலகமக்கள் அனைவருக்கும் அதில் படிப்பினையும், எச்சரிக்கைகளும் பல்வேறு விதங்களில் கூறப்பட்டுள்ளது.
இறைவனை ஏற்காதோருக்கு வேண்டுமெனில் அவைகள் மிக சாதரமாக இருக்கலாம். ஆனால்
ஓரிறைவனை ஏற்று அவனின் சட்டதிட்டங்கள் அறிந்து, இன்னதற்கு இன்ன நன்மை, இன்னதற்கு இன்ன தீமையென்று புரிந்து வாழும் முஸ்லீம்களாகிய நாம், அவற்றை பொடுபோக்காக எடுத்துக்கொண்டு செயல்படுவதுதான்
வேதனைக்குறிய விசயமாக இருந்துவருகிறது,

இந்த அற்புத மார்க்கத்தை தழுவியவர்கள் முஸ்லீம்களாக வாழ்கிறார்கள், அப்படி முஸ்லீமாக, இஸ்லாமியனாக வாழும் அவர்கள் தங்களின் வாழ்க்கைமுறையை பிறரும் பின்பற்றி நடப்பதுபோலவும் வாழ்ந்துகாட்டுகிறார்கள். அதேசமயம் முஸ்லீம் பெயர்தாங்கிகளாய் வாழும் பெரும்பாலானோர்கள், தாங்கள் வழிகெடுவதோடு மற்றவர்களையும் வழிகெடுக்கிறார்கள், இப்படியான முஸ்லீம்களைகண்டு பிறமதத்தவர்கள், இதுதான் இஸ்லாம், இதுதான் இஸ்லாத்தின் கொள்கை, இதுதான் இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கும்  பழக்கவழக்கம் எனதவறாக புரிந்துகொண்டு பலயிடங்களில் இஸ்லாத்தை கேலிசெய்வதோடு, இது ஒரு வன்முறையான மார்க்கம், வாலால் பரப்பட்ட மார்க்கம், இன்னும்பல புரிதல்களால் உண்மைபுரியாமல் கண்ட கண்ட கழிசடையில் கடைந்தெடுத்த சாக்கடைகள்கூட தாமும் தன்னைச் சார்ந்தவர்களும் சந்தனமென பேசித்திரியுமளவுக்கு நடந்துகொள்கிறார்கள்.

பிறர் பேசுவதாலோ! அல்லது பிறர் குறைகூறுவதாலோ!அல்லது பிறர் சீண்டிப்பார்ப்பதாலோ. தீன்மார்க்கம் ஒருபோதும் தன் தரத்திலிருந்து சிறிதளவேனும் மாறாது, ஆனால் அதனை தவறாக எண்ணுவதற்கு காரணமாக நாமே ஆகிவிடக்கூடாது என்பதில் மிக மிக கவனமும் அக்கரையும் வேண்டுமல்லவா?

ஒன்றை கவனிக்கவேண்டும். இஸ்லாமியனென்றால் இப்படிதான் இருக்கவேண்டும், இப்படித்தான் நடக்கவேண்டும், இப்படிதான் வாழவேண்டும்,என்ற வரையறைகுப்படுத்தபட்டே வாழ வழிவகுத்ததந்த மார்க்கத்தில் வந்துவிட்டு, பெயரவில்மட்டும் நான் இஸ்லாமியன்! நான் முஸ்லீமென்று சொல்லிக்கொண்டு நடப்பதில் நமக்கு நாமே தீங்கிழைத்துக்கொள்கிறோம் என்பதை மறந்துவிடுகிறோமே!

பலதரப்பட மக்கள் வாழும் தமிழ்நாட்டில் பண்பட்டவர்களாக வாழ்ந்துகாட்டி இஸ்லாத்தின் மாண்புகளை எடுத்துச்சொல்லி புரியவைக்க முயச்சிக்கும் நாம், நமக்குள் ஒற்றுமைகளற்று நம்மை நாமே ஏசிக்கொண்டு
நீ செய்வது சரியா? நான் செய்வது சரியாயென வாதிட்டு, பிறமதத்தவர்கள் முன்னால் நாம் காட்சிப்பொருளாக ஆக்கபடுகிறோம் என்பதை சிந்திக்கத் தவறிவிடுகிறோம். அதே சமயம் இஸ்லாமியர்களென்றால்
இப்படிதான் என்ற எண்ணத்தையும் வளர்த்துவருகிறோமே! இதை இல்லையென்று யாரேனும் சொல்லமுடியுமா?.

மேலும் சிலர், மாற்றுமத கலச்சாரங்களோடு பின்னிப் பிணைந்து அதனில் தன்னை நுழைத்துக்கொண்டதோடு, பிறரையும் நுழைய தூண்டுகோலாக இருப்பதும், இறைவன் என்பவன் ஒருவன் அவனுக்கு
இணை துணையில்லை என்பதை தெளிவாக தெரிந்தபின்பு சீர்கேடென்னும் வழிகேட்டில் இருக்கிறார்கள். தான் இறந்தபின்பு தனது கப்ரை உயர்த்துவதே கூடாது என நமது உயிரிலும் மேலான நபிகள் பெருமானார்[ஸல்]அவர்கள் கூறிய சென்ற மார்க்கத்தில், ஆங்காங்கே நல்லவர்களுக்காகவென கூறிக்கொண்டு கப்ரெழுப்பி, அதற்குள் அடங்கியிருப்பவர்களையும் தர்ம சங்கடதுக்குள்ளாக்கி, அதன்மூலம் வருவாய்திரட்டி இறைவனுக்கும் நபிக்கும் மாறுசெய்கிறார்கள்.

இன்னும் சிலர், இஸ்லாத்தில் திருமணமென்பது மிகுந்த எளிய காரியமாய்
மணமகன் மஹர்கொடுத்து மணமுடிப்பது என்ற வரம்பையே மீறி, மணமகள் வீட்டில் வரசட்சனைகள் கேட்டு மணமுடிக்கிறார்கள். வரதட்சணை வாங்குவதால் ஒரு குடும்பத்துக்கு மாபெரும் அநீதம் செய்கிறோம் என்றில்லாமல், அவர்களை வறுமையிலும் ஆழ்த்தி, கடனென்னும் புதைகுழிக்குள் தள்ளி, அந்தக் குடும்பத்தையே அழிக்கிறோம் என்பதை வரதட்சனை வாங்கும் மணமகனும், மணமகனின் குடும்பத்தாரும் நன்கு புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். [இதில்மட்டும் தன் தாய் தந்தையை கைகாட்டி தப்பிக்கும் இளைஞர்களாகவும் ஆகுகிறார்கள்]

அநீதம் செய்வதால் ஏற்படும் நிலைகுறித்து இஸ்லாம் கடுமையாகக் கண்டிதிருந்தும் இதுபோன்ற காரியங்கள் செய்கிறார்கள். மேலும்,
அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயாராக வைத்துள்ளோம். அல்குர்ஆன் (25:37)

இன்னும் சிலரோ, மார்க்கப்பற்று  நிறைந்தவர்களாக, மார்க்கம் எதை சொல்கிறதோ அதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை,
அதன்படிதான் நாம் நடக்கவேண்டுமென பிறருக்கு கட்டளையிட்டுவிட்டு, அதற்கும் தனக்கு கொஞ்சமும் சம்மந்தமில்லததுபோல் தாங்கள் நடந்துகொள்வதும், மனைவியை இப்படி நடக்கக்கூடாது இது மார்க்கம் தடுத்துள்ளது என சொல்லும் கணவர், தான் செய்வதை சூழ்நிலையென சூழ்நிலைமேல் பழிபோட்டு தப்பித்துக்கொள்வதும், மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத செயல்களை தானே புரிந்துகொண்டும் அதை பிறர் புரியும்போது, இது கடுகளவும் கூடாதென கோபம்கொண்டு கொதித்தெழுகிறார்கள்.

இன்னும் சிலர், ஜாதகம் சோதிடம் என்று படைத்தவனை நம்பாது அவனால் படைக்கப்படவைகளை, நம்பி அவர்களிடம் ஏமாருகிறார்கள். கோடிகோடியாய் பணமிருந்தும் கொடுக்கும் மனப்பான்மையற்று இருக்கிறார்கள், வட்டிக்குவிட்டு வசதியாக வாழ்கிறார்கள். [இத்தனைக்கும் இறைவன்மேல், நபியின்மேல் உயிரையே வைத்துள்ளேன் என்ற சப்பைக்கட்டுவேறு] இதற்குமேலும் போய் இன்னும் சிலரோ மார்க்கத்தில் இல்லாதவைகளை தாமாக சேர்த்துக்கொண்டு இதுவும் இஸ்லாம் சொன்னதுதான் என்று நடக்கிறார்கள்.

சரி இதற்கான தீர்வுதான் என்ன? வேறென்ன இஸ்லாம்தான்! திருகுர்ஆன்தான்! நபிவழிதான், இதனிலிருந்தே படிப்பினையை பெறவேண்டும். முஸ்லீம்களையோ, இஸ்லாமியர்களையோ சார்ந்ததல்ல இஸ்லாம், இஸ்லாத்தை சார்ந்து, அதன் வழிமுறையைபின்பற்றி  அதன்வழி நடப்பவர்களே, உண்மையான முஸ்லீமும் இஸ்லாமியனும் ஆவார்கள்.

பெயர்தாங்கி முஸ்லீம்களாக இஸ்லாமியர்களாக வாழ்வதால் யாருக்கு கேடு? நமக்குதான்!கவனத்தில்கொள்ளுங்கள், நாளை இதுபற்றி இறைவனிடம் கட்டாயமாக கேள்விகேட்கப்படுவோம்,

நல்லது கெட்டதுகளை பிரித்தறிந்த பின்பும், தவறுகளை தொடர்வது குற்றத்திலும் குற்றமல்லவா? அறியாதவர்களுக்கு எத்திவைக்கும் நாம், அறிந்தே குற்றங்கள் செய்யலாமா? நம்மைக் கண்டுதான் இஸ்லாமென்று மாற்றுமதத்தவர்கள் நினைக்கும்போது இஸ்லாத்தில் வழியில் நடந்து இதுதான் இஸ்லாத்தின் நிலை! இதுதான் இஸ்லாத்தின் அழகிய வழி! இதுதான் இஸ்லாத்தின் மகிமை! என்பதை நமது நடைமுறைகளில் கொண்டுவரவேண்டாமா? பலபிரிவுகளாக பிரிந்துகொண்டு, நீயா நானா? 
 நீ கூறுவது இஸ்லாமா? நான் கூறுவது இஸ்லாமா? என்று தானும் குழம்பி மற்றவரையும் குழப்புவதைவிட்டும் நாம் தெளிவு பெறவேண்டாமா? நம்மைக் கண்டு நாம் வாழ்வதைக் கண்டு, நம்மின் செயல்கள் கண்டு, நமது மார்க்கத்தின் தூயநிலையில்  இன்னும் அதிக்கப்படுத்தவேண்டாமா?

சிந்தியுங்கள் சிந்திக்கும் கூட்டத்தாருக்கே இறைவனின் சொல்லும், செயலும் புரியும், உண்மையான முஸ்லீமாக வாழ முயற்சிக்காதவரை இவ்வுலகத்தில் மட்டுமல்ல மறுவுலத்திலும் நஷ்டந்தான் ஏற்படும்.

நம்மிலிருக்கும் குறைகளை அகற்றி நாம் தெளிந்தால்தான் பிறரையும் தெளிவாக்கமுடியும். அருமை நாயகம் வாழ்ந்துக் காட்டினார்களே!
சொல்லிலும் செயலிலும் நடைமுறைப்படுத்திக் காட்டினார்களே! ஸஹாபா பெருமக்களும், அதனை பின்பற்றி வாழ்ந்துகாட்டினார்களே! அப்படியொரு வாழ்க்கையை நாம் முழுமையாக வாழ முடியாவிட்டாலும், அதனின்றும் அதன்வழி நடக்கவாவது முயற்சிகள் மேற்கொள்ளவேண்டாமா?
தீன்வழி நடக்கவேண்டாமா?

இனிமேலவது சிந்தியுங்கள் உங்கள் சிந்தனை உங்களையும், உங்களைச் சார்ந்தவர்களையும், இன்னும் உங்களைச் சுற்றி இருப்பவர்களையும், தெளிவு பெறும்படியாக சிந்தியுங்கள், அதற்கான கூலியை இறைவன் நிச்சயமாக வழங்குவான்.

இறைவா! எங்களை முஸ்லீமாகவே வாழச்செய்து,முஸ்லீமாகவே மரணிக்கசெய்வாயாக! மேலும் இஸ்லாத்தின் கொள்கையை இயன்றளவு இவ்வுலகத்தாருக்கு எத்திவைக்கும் பாக்கியத்தையும், எத்தி வைப்பதுபோலவே  நாங்கள் நடக்கவும் தவ்ஃபீக் செய்வாயாக!

ஆமீன் ஆமின் யாரபல் ஆலமீன்

அன்புடன் மலிக்கா
இறைவா!
 உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..